பள்ளிக் கல்வித்துறையில் பணி நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஐந்தாண்டுகளுக்கு பின், பணிவரன்முறை ஆணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், 2002ம் ஆண்டு வரை, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நேரடி நியமனம் பெறும் ஆசிரியர்களுக்கு, பணிநியமன ஆணையிலேயே, அது முறையான நியமனம் எனக்குறிப்பிடுவது வழக்கமாக இருந்தது. கடந்த, 2002-04 வரை, அரசு பள்ளிகளில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தற்காலிகமாக பணிநியமனம் செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும், 2006ம் ஆண்டுக்கு பின் பணிநிரந்தரம் செய்யப்பட்டனர். அப்போது, அதற்கான பணிவரன்முறை ஆணை வெளியிடப்பட்டது.

இந்த ஆணையை எடுத்துக்காட்டாக வைத்து, ஒவ்வொரு பணிநியமனத்துக்கும் துறை சார்ந்த அதிகாரிகள் பணிவரன்முறை ஆணை வெளியிட வேண்டும் என வலியுறுத்த தொடங்கினர். இதனால், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கும் பல்வேறு சலுகைகள் நிலுவையில் வைக்கப்பட்டன. ஐந்தாண்டுகளுக்கு பின், தற்போதுதான், 2009-10, 2010-11 ஆண்டுகளில் பணிநியமனம் பெற்ற, தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிவரன்முறை ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:
தகுதித்தேர்வின் மூலம் நியமனம் பெறும் ஆசிரியர்களுக்கு, பணிநியமனத்தின் போதே, பணிவரன்முறை குறித்தும் குறிப்பிட வேண்டும். அவ்வாறு செய்யாததால், ஆசிரியர்களுக்கு பல்வேறு சலுகைகளை தலைமை ஆசிரியர்கள் வழங்குவதில்லை. பல ஆண்டு கழித்து, இப்போதாவது பணி வரன்முறை ஆணை வந்துள்ளதே என, ஆசிரியர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
error: Content is protected !!