சென்னை: தமிழகத்தில், 25 குழந்தைகளுக்கு குறைவாக உள்ள சத்துணவு மையங்கள், மூடப்பட உள்ளதாக பரவிய தகவலை, சமூக நலத்துறை மறுத்துள்ளது.தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில், 97 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.இவற்றில், 70 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள், மாணவ – மாணவியர் பயன் பெற்று வருகின்றனர்.பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை குறைவதால், சத்துணவு மையங்களில் பயன்பெறுவோரின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது. எனவே, 25 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளில், சத்துணவு மையங்களை மூடிவிட்டு, அருகில் உள்ள பள்ளிகளில் இருந்து, உணவு வழங்கப்பட உள்ளதாக தகவல் பரவியது.இதன்படி, 8,000 சத்துணவு மையங்கள் மூடப்படும் என்றும், இதனால், பயனடையும் மாணவர்களுக்கும், ஊழியர்களுக்கும் சிக்கல் ஏற்படும் என்பதால், இந்த முயற்சிக்கு எதிர்ப்பு அதிக மானது.இது குறித்து, சமூக நலத்துறை கமிஷனர், அமுதவல்லி கூறியதாவது:தமிழக சத்துணவு திட்டத்தில், ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. 25க்கும் குறைவான, மாணவர்கள் உள்ள மையங்களில், சத்துணவு அமைப்பாளர்கள் உள்ளனர்; மாணவர்கள் அதிகம் உள்ள மையங்களில், அமைப்பாளர்கள் இல்லாத நிலை உள்ளது.எனவே, 25 மாணவர்களுக்கு குறைவான மையங்களில் உள்ள, 4,000 அமைப்பாளர்களை, மாணவர்கள் அதிகம் உள்ள மையங்களுக்கு மாற்ற திட்டமிட்டுஉள்ளோம்.அதிலும், அருகில் உள்ள மையங்களுக்கு, அவர்களின் விருப்பப்படி தான் மாற்ற உள்ளோம். அடுத்தாண்டில், ஓய்வு பெறுவோரை மாற்றும் எண்ணம் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

error: Content is protected !!