சென்னையில் 39-ஆவது புத்தகக் கண்காட்சி தீவுத்திடலில் புதன்கிழமை (ஜூன் 1) தொடங்க உள்ளது.தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள்- பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) சார்பில் நடைபெறவுள்ள இந்தப் புத்தகக் கண்காட்சியில் சுமார் 700 அரங்குகள் இடம்பெறவுள்ளன. ஜூன் 1-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரைபுத்தகக் கண்காட்சி நடைபெறும்.

இது தொடர்பாக சங்கத்தின் பொருளாளர் ஒளிவண்ணன் கூறியது: புலம் பெயர்ந்த தமிழர்களை அங்கீகரிக்கும் வகையில் இந்த ஆண்டு சிங்கப்பூர் வாழ் தமிழ் எழுத்தாளர்களுக்கென்று ஒரு அரங்கம் பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் வாழ் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் அந்த அரங்கில் காட்சிப்படுத்தப்படும். மேலும், அந்த எழுத்தாளர்களுடன் கலந்துரையாடல், விவாதம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்காட்சியில் சுமார் 6 ஆயிரம் புதிய புத்தகங்களும், சுமார் ஒரு லட்சம் நூல்களும் இடம் பெறவுள்ளன.

பார்வைத் திறன் குறைபாடுடையவர்களுக்கான பிரெய்லி நூல்கள் அடங்கிய சிறப்பு அரங்கமும் அமைக்கப்பட உள்ளது.நுழைவுக் கட்டணம் ரூ.10: புத்தகக் கண்காட்சிக்கான நுழைவுக் கட்டணம் ரூ. 10 ஆகும். வார நாள்களில் பிற்பகல் 1 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், வார இறுதி நாள்கள், விடுமுறை நாள்களில் காலை 11 முதல் இரவு 9 மணி வரை கண்காட்சி நடைபெறும். கண்காட்சியில் வாங்கும்புத்தகங்களுக்கு 10 சதவீதம் சலுகை அளிக்கப்படும்.மேலும் மாடித் தோட்டம் குறித்த அரங்கு, உணவுத் திருவிழா, ஓவியம், இசை, சார்ந்த போட்டிகளும் நடைபெறும் என்றார் அவர்.

error: Content is protected !!