இளநிலை மருத்துவப் (எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ்) படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை (டிச.7) கடைசி நாளாகும்.
ஜே.இ.இ., நெட் போன்ற மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் தேர்வுகளை நடத்தும் பொறுப்பு தேசிய தேர்வுகள் முகமையிடம் (என்.டி.ஏ.) ஒப்படைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வையும் என்.டி.ஏ. நடத்துகிறது. 2019-ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு அறிவிப்பை என்.டி.ஏ. அண்மையில் வெளியிட்டது.
இதற்கு விண்ணப்பிக்க முன்னர் நவம்பர் 30 கடைசி தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர், வயது உச்சவரம்பு தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மேலும் ஒரு வார காலத்துக்கு நீட்டிக்கப்பட்டது.
அதன்படி, நீட் தேர்வுக்கு ஆன்-லைனில் விண்ணப்பத்தைப் பதிவு செய்ய வெள்ளிக்கிழமை கடைசி நாளாகும். ஆன்-லைனில் கட்டணம் செலுத்த சனிக்கிழமை (டிச.8) கடைசியாகும். மேலும், விவரங்களுக்கு www.nta.ac.in என்ற இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

error: Content is protected !!