மேல்நிலை பொது தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளுதல் மற்றும் தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறியவர்கள் ’சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ்’ விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை, அரசு தேர்வர்கள் இயக்கம் வெளியிட்டுள்ளது.

நடைபெறவுள்ள மார்ச் 2016, மேல்நிலைப் பொதுத் தேர்வெழுத, அரசுத் தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் 30.01.2016 முதல் 01.02.2016 வரை  www.tndge.in  என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், மேல்நிலை பொது தேர்வுக்கு, விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்)   02.02.2016 முதல்   04.02.2016  வரை விண்ணப்பிக்கலாம்.
வெளியிட்ட அறிக்கையில்:
எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறை அடங்கிய பாடங்களில் செய்முறைத் தேர்வில் 40 மதிப்பெண்களுக்குக் குறைவாகப் பெற்று தேர்ச்சி அடையாதவர்கள் கண்டிப்பாக செய்முறைத் தேர்வினை மீண்டும் செய்வதோடு, எழுத்துத் தேர்விற்கும் வருகை புரிய வேண்டும்,  அதிகபட்ச மதிப்பெண் 200 கொண்ட செய்முறை மட்டும் உள்ள பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்கள் மீண்டும் செய்முறைத் தேர்விற்கு வருகை தர வேண்டும்.
முதன்முறையாக மேல்நிலைத் தேர்வெழுத விண்ணப்பித்துள்ள நேரடித் தனித் தேர்வர்கள் பகுதி I,பகுதி II மொழிப் பாடத்தின் தாள் இரண்டு மற்றும் பகுதி III-ல் சிறப்பு மொழி (தமிழ்) எழுதும் தேர்வர்கள் கேட்டல்/பேசுதல்  (aural/oral skill test) திறன்  தேர்வுகளைக் கண்டிப்பாக செய்ய வேண்டும்.
மொழிப் பாடங்களில் கேட்டல்/பேசுதல் திறன் தேர்வு, சிறப்பு மொழி (தமிழ்)பாடத்தில் கேட்டல்/பேசுதல் திறன் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தைத் தனித்தேர்வர்கள் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும். உரிய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
’தட்கல்’
மேல்நிலைப்  பொதுத் தேர்வெழுத தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களுக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தவறி, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்களிடமிருந்து சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சிறப்பு மையங்கள்:
தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்காக ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் அரசுத் தேர்வுத் துறை சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.  தனித்தேர்வர்கள் தாங்கள் எந்த கல்வி மாவட்டத்திலிருந்து விண்ணப்பிக்கிறார்களோ, அந்த மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத்  துறை சேவை  மையத்திற்கு   02.02.2016 முதல் 04.02.2016 வரை ஆகிய தினங்களில் நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் அனைத்து தனித்தேர்வர்களுக்கும் திருநெல்வேலி, மதுரை, கோவை, திருச்சி, கடலூர், வேலூர் மற்றும் சென்னை ஆகிய தலைமை  இடங்களில்  மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்படும்.
தனியார் Browsing Centre-கள் மூலம் விண்ணப்பிக்க இயலாது. கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்களின் விவரத்தை www.tndge.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
தேர்வுக் கட்டணம்:
‘எச்’ வகை தனித்தேர்வர்கள்  ஒரு பாடத்திற்கு – ரூ.50 + (இதர கட்டணம் ரூ.35/-)
‘எச்.பி’ வகை நேரடித் தனித்தேர்வர்கள் – ரூ.150+37=ரூ.150+37=ரூ.187/-
இவற்றுடன் கூடுதலாக சிறப்பு அனுமதி கட்டணமாக ரூ.1000/- மற்றும் ஆன்-லைன் பதிவுக் கட்டணமாக ரூ.50/- ஐ பணமாக மட்டுமே அரசுத் தேர்வுத் துறை சேவை மையத்தில் செலுத்த வேண்டும்.
அரசுத் தேர்வுத் துறை சேவை மையத்தில் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:
’எச்’வகையினர்
உரிய தேர்வுக் கட்டணம் + சிறப்பு கட்டணம் ரூ.1000/- + ஆன்லைன் பதிவு கட்டணம் ரூ.50/- (சேவை மையத்தில் பணமாகச் செலுத்தவேண்டும்)
மதிப்பெண் சான்றிதழ் ஒளி நகல் (இதுவரை எழுதிய மேல்நிலைத் தேர்வுகளுக்கானது).
பள்ளித் தலைமை ஆசிரியரிடம் பெற்ற தகுதிச் சான்றிதழ் (பள்ளி மாணவராக பதிவு செய்யப்பட்டு தேர்வெழுதாதவர்களுக்கு மட்டும்).
செய்முறை மதிப்பெண்களுக்கான ஆவணம் (செய்முறை அடங்கிய பாடங்களைத் தேர்வெழுதுவோர் மட்டும்)
‘எச்.பி’வகையினர்
உரிய தேர்வுக் கட்டணம் + சிறப்பு கட்டணம் ரூ.1000/- + ஆன்-லைன் பதிவு கட்டணம் ரூ.50/- (சேவை மையத்தில் பணமாகச் செலுத்தவேண்டும்)
பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்.
பள்ளி மாற்றுச் சான்றிதழின் அசல்
இடப்பெயர்வு சான்றிதழ் அசல் (வெளி மாநிலத் தேர்வர்கள் மட்டும்)
தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும். இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிவுரைகளின்படி வயது வரம்பு, கல்வித் தகுதி மற்றும் பாடங்கள் வகைப்பாடு அறிந்து அதன்படி விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.
error: Content is protected !!