பிளஸ் 2, பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய தேர்வர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் ஆகியவை திங்கள்கிழமை முதல் வழங்கப்படவுள்ளன.
இது குறித்து தேர்வுத்துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:
கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பிளஸ் 2 துணைத் தேர்வு எழுதியவர்களுக்கு அக்.31 ஆம் தேதியிலிருந்தும், பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய தேர்வர்களுக்கு அக்.25 ஆம் தேதியிலிருந்தும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தேர்வர்கள் தாங்களே ஆன்-லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.
இதையடுத்து பிளஸ் 2, பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுகளை எழுதிய தேர்வர்கள் (மறுகூட்டல், மறுமதிப்பீடு உள்பட) தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை திங்கள்கிழமை முதல் அவர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களிலேயே பெற்றுக் கொள்ளலாம்.
நிரந்தர பதிவெண் கொண்ட தேர்வர்கள் இதற்கு முந்தைய பருவங்களில் அவர்கள் தேர்ச்சி பெறாத பாடங்களை செப்டம்பர், அக்டோபர் துணைத் தேர்வில் தேர்வெழுதி, அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருப்பின் அவர்களுக்கு ஒருங்கிணைந்த அசல் மதிப்பெண் சான்றிதழ்களும்,
முழுமையாக தேர்ச்சி பெறாதவர்களுக்கு அவர்கள் தேர்வெழுதிய பாடங்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்களும் வழங்கப்படும் என அதில் தெரிவித்துள்ளார்

error: Content is protected !!