தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:–பள்ளி மாணவ, மாணவியரின் கல்வி மேம்பாட்டிற்காக குறிப்பாக, ஏழை எளிய மக்களின் குழந்தைகள் இடைநிற்றல் இன்றி கல்வி கற்கும் வகையில் கட்டணமில்லா கல்வி, சத்தான உணவு, விலையில்லா சீருடைகள்,
மடிக்கணினிகள், பாடப் புத்தககங்கள், நோட்டுப் புத்தகங்கள், கல்வி உபகரணங்கள், புத்தகப் பை, காலணிகள், பேருந்து பயண அட்டைகள், மிதி வண்டிகள், ஊக்கத் தொகை, பள்ளிகளின் கட்டமைப்புகளை மேம்படுத்துதல்போன்ற எண்ணற்ற திட்டங்களை முதல்– அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது .அந்த வகையில், தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியம், பெரியாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 12,251 சதுர அடி கட்டட பரப்பளவில், 100 மாணவியர் தங்குவதற்கு ஏதுவாக தரை மற்றும் ஒரு தளத்துடன் 25 தங்கும் அறைகள், பார்வையாளர்கள் அறை, சமையலறை, உணவு உண்ணும் அறை,நூலகம், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுடன் 2 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாணவியர்களுக்கான விடுதிக் கட்டடத்தை முதல்– அமைச்சர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.மேலும், பள்ளி மாணவ, மாணவியரின் கல்வி மேம்பாட்டிற்காக, குறிப்பாக பெண் குழந்தைகள் கல்வி கற்பதை ஊக்குவிக்கும் பொருட்டு அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தின் கீழ் 145 கோடியே 67 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அரியலூர், தருமபுரி, கரூர், கிருஷ்ணகிரி, சேலம், சிவகங்கை, நாமக்கல், திருப்பூர், விழுப்புரம், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி வளாகங்களில் கட்டப்பட்டுள்ள 20 மாணவியர் விடுதிகள்; தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள 13 பள்ளிக் கட்டடங்கள், 8மாதிரி பள்ளிக் கட்டடங்கள், 233 அறிவியல் ஆய்வுக் கூடங்கள், 454 கூடுதல்வகுப்பறைகள். நபார்டு திட்டத்தின் கீழ் 9 மாவட்டங்களில் அமைந்துள்ள 31 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 26 கோடியே 14 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 221 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 23 ஆய்வுக் கூடங்கள், சுற்றுச் சுவர், குடிநீர் வசதி மற்றும் கழிப்பறைகள்.பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த தரமான கல்வி வழங்குவதை உறுதி செய்யும் வகையில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் 32 கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 215 அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள 240 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 140 தொடக்கப் பள்ளி கட்டடங்கள், 72 நடுநிலைப் பள்ளி கட்டடங்கள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 உண்டு உறைவிட பள்ளிக் கட்டடங்கள் மற்றும் விழுப்புரம் மாவட்டம் கூத்தனூரில் அமைந்துள்ள கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளிக் கட்டடம்.பொதுமக்களிடம் வாசிக்கும் திறனை மேம்படுத்தும் பொருட்டு பொது நூலக இயக்ககத்தின் கீழ் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மற்றும் வேலூர் மாவட்டம் வாலாஜா ஆகிய இடங்களில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கிளை நூலக கட்டடங்கள்;அரசு பொதுத் தேர்வுகளை செம்மையாக நடத்தும் பொருட்டு, கடலூரில் 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு தேர்வுத்துறை மண்டல துணை இயக்குநர் அலுவலகக் கட்டடம்;ஆசிரியர் கல்வி பயில விரும்பும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சியினை அளிக்கும் பொருட்டு பெரம்பலூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் 1 கோடியே 94 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் என மொத்தம் 210 கோடியே 42 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளி கல்வித்துறை கட்டடங்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.மேலும், காஞ்சிபுரம், நாகப்பட்டினம், பெரம்பலூர், நீலகிரி, விழுப்புரம், திருவாரூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கீழ் 13 கோடியே 65 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள ஒன்றிய ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனக் கட்டடங்கள்;அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 387 கோடியே 49 லட்சத்து 3 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 231 பள்ளிக் கட்டடங்கள் என மொத்தம் 401 கோடியே 14 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள ஒன்றிய ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனக் கட்டடங்கள் மற்றும் பள்ளிக் கட்டடங்களுக்கு ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனக் கட்டடங்கள் மற்றும் பள்ளிக் கட்டடங்களுக்கு முதல்– அமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும்கடலூர் மாவட்டங்களில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவ, மாணவியர் வரவிருக்கும் பொதுத்தேர்வினை எதிர் கொள்வதற்கு உதவும் வகையில் 12–ம் வகுப்பிற்கான தமிழ், ஆங்கிலம், கணக்கு, இயற்பியல், வேதியியல், உயிரியல், வரலாறு, புவியியல், பொருளியல், வணிகவியல், கணக்குப் பதிவியல் மற்றும் 10ஆம் வகுப்பிற்கான அனைத்துப் பாடங்களையும் உள்ளடக்கிய கற்றல் கையேடுகளை மாணவ, மாணவியருக்கு வழங்கும் அடையாளமாக 5 மாணவ, மாணவியர்களுக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கற்றல் கையேடுகளை வழங்கினார்.இதன்மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 21 ஆயிரத்து 374மாணவ, மாணவியர் பயனடைவர். இந்த நிகழ்ச்சியில், உயர்கல்வித்துறை அமைச்சர்கள் பழனியப்பன், கே.சி. வீரமணி, தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் சபிதா, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
error: Content is protected !!