சென்னை,பள்ளி மாணவர்களிடம், ஆதார் எண் பெறுவது கட்டாயம் என்ற உத்தரவு, மாற்றப்பட உள்ளது. ஆதார் ஆணைய உத்தரவின்படி, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.நாடு முழுவதும், பல்வேறு துறைகளில், பொதுமக்கள் மற்றும் நுகர்வோரிடம், ஆதார் எண்கள் கேட்கப்படுகின்றன.மத்திய – மாநில அரசின் திட்டங்களில் முறைகேட்டை தடுக்க, ஆதார் எண்களை பெற்று, அதன்படி பயனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.மேலும், வங்கிகள், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளும், ஆதார் எண்களை சேகரித்து வருகின்றன.இதனால், ஆதார் எண்கள் பல இடங்களில் கசிந்து, தனிநபர் பாதுகாப்புக்கு சிக்கல்ஏற்படுகிறது.இதுகுறித்து, உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசின் திட்டங்களுக்கு மட்டும், ஆதார் எண்ணை சேகரிக்க, உத்தரவிடப்பட்டுள்ளது.அதனால், மத்திய அரசின், நீட், ஜே.இ.இ., போன்ற நுழைவு தேர்வுகளுக்கு, மாணவர்களின் ஆதார் எண் கட்டாயமில்லை என, அறிவிக்கப்பட்டது.ஆனால், பள்ளி களில் மாணவர் சேர்க்கை மற்றும் தேர்வு பணிகள் நடக்கும் நிலையில், ஆதார் எண் கட்டாயம் வேண்டும் என, பெற்றோர் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.இதுதொடர்பாக, ஆதார் ஆணையத்துக்கு, பெற்றோர் புகார் அனுப்பினர்.புகாரை விசாரித்த ஆதார் ஆணையம், பள்ளிகள், கல்லுாரிகள், மாணவர்களிடம் ஆதார் எண்ணை கேட்டு, கட்டாயப்படுத்த கூடாது என, உத்தரவிட்டுள்ளது.இந்த உத்தரவைத் தொடர்ந்து, தமிழக பள்ளி களிலும், ஆதார் எண் கட்டாயம் என்ற உத்தரவு மாற்றப்பட உள்ளது. தமிழக பள்ளி கல்வியில், ‘எமிஸ்’ என்ற, கல்வி மேலாண்மை தகவல் அமைப்பின் சார்பில், ஆதார் எண் பெறப்படுகிறது.’அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு, இலவச நல திட்டங்கள் அமல்படுத்துவதால், அதற்கு மட்டும் ஆதார் எண்ணை கட்டாயம் ஆக்கலாம்.’மற்ற தனியார் பள்ளி மாணவர்களுக்கு, விருப்பப்பட்டால் மட்டுமே, ஆதார் எண்ணை வழங்கலாம்’ என, திருத்தம் செய்யப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!