நாகர்கோவிலில் பிஎஸ்என்எல் சார்பில் படித்த இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி திங்கள்கிழமை (பிப்.18) தொடங்குகிறது.
இதுகுறித்து, நாகர்கோவில் பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் சஜூகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:  தமிழக அரசு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் நாகர்கோவில் பி.எஸ்.என்.எல். இணைந்து வழங்கும் வேலை இல்லா படித்த இளைஞர்களுக்கான இலவச திறன் மேம்பாட்டு “நெட்வொர்க் மேனேஜ்மென்ட் என்ஜினியரிங்’ தொழில்நுட்ப பயிற்சி பிப். 18ஆம் தேதி தொடங்குகிறது.
இதில் டிப்ளமோ , பிஎஸ்சி மற்றும் பிஇ வரை படித்து வேலை இல்லா இளைஞர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெறலாம். இப்பயிற்சி பிப்.18ஆம் தொடங்கி 6 வாரங்கள் நடைபெறும். பயிற்சியின்போது பங்குபெறும் இளைஞர்களுக்கு ஊக்கதொகையாக தினமும் ரூ. 100 வழங்கப்படுகிறது.
பயிற்சியில் சேர விரும்பும் இளைஞர்கள் நாகர்கோவில் வாட்டர் டேங்க் சாலையில் உள்ள தொலைபேசி அலுவலகத்துக்கு நேரில் வந்து பாஸ்போர்ட் அளவு புகைப்படம் , படிப்புச் சான்றிதழ் நகல், ஆதார் அடையாள அட்டை மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களுடன் பதிவு செய்து பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம்.  மேலும் விவரங்களுக்கு, துணை கோட்ட பொறியாளர் ஓ. மணியை, தொலைபேசி எண் 04652 – 279999, செல்லிடப்பேசி எண் 9486102609 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!