நாகர்கோவில் தெ.தி. இந்து கல்லூரியில், திருநெல்வேலி, குமரி மாவட்ட இளம் மாணவ அறிவியல் விஞ்ஞானிகள் பயிற்சி முகாம்  டிச. 24 முதல் ஜனவரி 7 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதுகுறித்து கல்லூரி முதல்வர் சிதம்பரதாணு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழக அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்றம் சார்பில், தமிழ்நாடு முழுவதும் பஞ்சாயத்து மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு அறிவியல் துறையில் மேம்பாடு அளிப்பதற்காக இளம் மாணவர் அறிவியல் திட்ட விஞ்ஞானிகள் முகாம் நடைபெற உள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்ட மாணவர்களுக்காக வரும் 24 ஆம் தேதி தொடங்கி, 15 நாள்கள் முகாம் நடைபெற உள்ளது.
இம்முகாமில், பஞ்சாயத்து மற்றும் கிராமப்புற பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவ,  மாணவிகள் பங்கேற்கலாம். பங்கேற்கும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் உணவு மற்றும் தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும். நிகழ்வில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், சுற்றுச்சூழலியல் போன்ற பாடங்களில் தரமிக்க வல்லுநர்களால் பயிற்சி அளிக்கப்படும்.
மேலும், மாணவ, மாணவிகள் மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ராஜாக்கமங்கலம் கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையத்திற்கும் அழைத்துச் செல்லப்படுவர். பயிற்சி நிறைவு நாளில் மாணவ, மாணவிகள் சுயமாக தயாரித்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாதிரிகளைக் கொண்டு அறிவியல் கண்காட்சி நடைபெறும்.
பயிற்சியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் இந்துக் கல்லூரி அலுவலகத்தில் நேரில் வந்து விண்ணப்பங்களைப் பெற்று வரும் 19ஆம் தேதிக்கு முன்னர் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளின் பட்டியல் 20 ஆம் தேதி வெளியிடப்படும்.
இரு மாவட்டங்களைச் சேர்ந்த 80 மாணவ, மாணவிகள் மட்டுமே தேர்வு செய்யப்படுவர்.
எனவே, முதலில் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும். பயிற்சி முகாமில் பங்கேற்கும் அனைவருக்கும் தமிழக அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்றம் சான்றிதழ் வழங்கப்படும்.
மேலும் தகவல்களுக்கு முனைவர் குமாரசுவாமியை 9443170733 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!