காலியாக உள்ள சிறப்பாசிரியர்கள் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
கோபி, நம்பியூர் அருகே உள்ள எலத்தூரில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நல்ல மழை பெய்து ஏரி, குளங்கள், அணைகள் நிரம்பியுள்ளதே தமிழகத்தில் நல்லாட்சி நடைபெறுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. மத்திய அரசின் ஐசிடி நிதியுதவியுடன் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கவும், கணினிகள் அமைக்கவும் டெண்டர்கள் முடிவடைந்து பணிகள் தொடங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் நிறைவடையும்போது ஒரு மாற்றத்தை தமிழகம் உருவாக்கும். இந்த டெண்டர்கள் மூலம் தனியார் நிறுவனங்கள் ஸ்மார்ட் வகுப்பறைகள், கணினிகள் அமைத்து நான்கு ஆண்டுகள் பராமரிக்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
சிறப்பாசிரியர்கள் கலந்தாய்வு விரைவில் நடைபெறும். அது முடிந்தவுடன் சிறப்பாசிரியர்கள் காலிப் பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும். நீட் தேர்வு உள்ளிட்ட மத்திய அரசு கொண்டுவரும் அனைத்து பொதுத் தேர்வுகளையும் மாணவர்கள் சந்திக்கும் வகையில் 40 சதவீதப் பாடங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
வரும் தேர்தலுக்காக அதிமுக சார்பில் அமைக்கப்பட்டு வரும் பூத் கமிட்டியில் ஏராளமான இளைஞர்கள் இணைக்கப்பட்டுள்ளனர் என்றார்
error: Content is protected !!