சென்னை: மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு, ‘டிஜிட்டல்’ சான்றிதழ் வழங்கப்படும் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில் செயல்படும் பள்ளிகளில், ஆசிரியர்களாக பணிபுரிய, மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். நடப்பு கல்வி ஆண்டுக்கான தேர்வு, நேற்று முன்தினம், நாடு முழுவதும் நடந்தது.தேர்வுக்காக, 92 நகரங்களில், 3,000க்கும் மேற்பட்ட மையங்கள் அமைக்கப்பட்டன. தேர்வுக்கு, 10 லட்சம் பெண்கள் உட்பட, 17 லட்சம் பேர் அனுமதிக்கப்பட்டனர். தேர்வுக்கான விடை திருத்தம் முடிந்து, இரண்டு மாதங்களில் முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.இந்நிலையில், தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு, டிஜிட்டல் சான்றிதழ் மட்டுமே வழங்கப்படும் என, சி.பி.எஸ்.இ., நேற்று அறிவித்தது. சி.பி.எஸ்.இ., செயலரும், ஆசிரியர் தகுதி தேர்வின் இயக்குனருமான, அனுராக் திரிபாதி, இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.அதன் விபரம்:மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு, மத்திய அரசின், ‘டிஜி லாக்கர்’ வழியாக, டிஜிட்டல் சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழில், கியூ.ஆர்., கோடு இருக்கும். இதை பயன்படுத்தி, நாட்டிலுள்ள எந்த கல்வி மற்றும் வேலைவாய்ப்பு நிறுவனமும், சான்றிதழின் உண்மை தன்மையை அறிந்து கொள்ளலாம்; தேர்வரின் விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.தேர்வில் தேர்ச்சி பெறும் பட்டதாரிகள், இணையதளத்திலும், ‘மொபைல் ஆப்’ வழியாகவும், சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யலாம்.

error: Content is protected !!