தமிழகத்தின் கடலோர பகுதிகளில் அனேக இடங்களில் இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த 26-ந் தேதியில் இருந்து 3 நாட்கள் வறண்ட வானிலை தமிழகத்தில் நிலவி வந்தது. கடந்த 29, 30-ந் தேதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்தது. அதன்பின்னர், கடந்த 3 நாட்களாக மீண்டும் வறண்ட வானிலையாகவே இருக்கிறது.
இந்த நிலையில் தென்மேற்கு வங்க கடலில் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
அனேக இடங்களில் மழை
தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்து வரும் 24 மணி நேரத்தில் (இன்று) கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழையும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்யும்.
கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அடுத்து வரும் 3 நாட்களுக்கு (6-ந் தேதி வரை) தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
வலுப்பெற வாய்ப்பு இல்லை
மீனவர்கள் தென்மேற்கு வங்க கடல் பகுதிக்கு செவ்வாய்க்கிழமை (இன்று) செல்ல வேண்டாம். சென்னையை பொறுத்தவரையில், இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுப்பெற வாய்ப்பு இல்லை. இது மேற்கு நோக்கி நகர்ந்து கேரளாவுக்கு செல்கிறது. அங்கு வலுவிழந்துவிடும். வடகிழக்கு பருவமழை காலத்தில் இதுவரை தமிழகத்தில் 36 செ.மீ. மழை பெய்து இருக்க வேண்டும். ஆனால் தற்போது 31 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. இது இயல்பை விட 13 சதவீதம் குறைவு ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
error: Content is protected !!