தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் தங்கள் பெயர்களை திருத்தம் செய்ய வரும் 16ம் தேதி வரை இறுதி அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளவும், கூடுதலாக மாணவர்களின் பெயரை சேர்க்கவும் அவசியம் ஏற்படின்  நீக்கம் செய்யவும் ஜனவரி மாதம் 27ம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்தநிலையில் 10ம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு பள்ளி  தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி பிப்ரவரி 11 மற்றும் 12ம் தேதிகளில் பெயர் பட்டியலை இஎம்ஐஎஸ் இணையதளத்தில் இருந்து தலைமை ஆசிரியர்கள்  பதிவிறக்கம் செய்துகொள்ள அரசு தேர்வுகள் இணை இயக்குநர் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அவ்வாறு பதிவிறக்கம் செய்யப்பட்ட பெயர் பட்டியலில் பள்ளியின் பெயர், மாணவர்களின் பெயர், முகப்பெழுத்து, பிறந்த தேதி மற்றும் பயிற்று மொழி ஆகியவற்றில் திருத்தம் ஏதுமிருப்பின்  அவற்றையும், மாணவர்களின் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் ஆகிய விபரங்களையும் மேற்கொள்ள பிப்ரவரி 13ம் தேதி முதல் 16ம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கீகாரம் பெறாத பள்ளிகளுக்கு எச்சரிக்கை அங்கீகாரம் பெறப்படாத புதிய பள்ளிகளின் பெயரில் மாணவர்களின் விபரம் பதிவேற்றம் செய்யக்கூடாது. அப்பள்ளிகள் மற்றொரு பள்ளியில் தங்கள் அறிவுரைப்படி மாணவர்களின் பெயரை  கூடுதலாக பதிவு செய்ய வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!