பெண் குழந்தைகள் பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் மேனகா காந்தி 2 விருதுகளை வழங்கினார்.

தேசிய பெண் குழந்தைகள் தினம் நேற்று வியாழக்கிழமை(ஜன.24) கொண்டாடப்பட்டது. இதையொட்டி பெண் குழந்தைகள் பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களுக்கு விருதுகள் வழங்கும் விழா மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் தில்லியில் நடைபெற்றது.

இதில், மத்திய அரசின் திட்டமான பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் என்ற திட்டத்தை இந்திய அளவில் சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

மக்கள் மத்தியில் இந்த திட்டத்தை சிறப்பாக எடுத்து சென்றதில் முதலிடம் பெற்ற திருவண்ணாமலை மாவட்டத்திற்கும் விருது வழங்கப்பட்டது.

இந்த விருதுகளை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி வழங்க, தமிழக சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை முதன்மை செயலாளர் மணிவாசன், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

நிகழ்ச்சியில், குழந்தை பருவத்தில் தனக்கு நடைபெற இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தியவரும், தமிழக அரசின் விருது பெற்ற குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வாளருமான திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி நந்தினி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

error: Content is protected !!