கோவை,:இனி, ‘உள்ளேன் ஐயா’ என்ற கோஷவொலி தேவையில்லை. மதியம் ‘கட்’ அடிக்கவும் வழியில்லை. மாணவர் முகம், விரல் ரேகை பதிவுடன், ‘ஸ்மார்ட் அட்டெண்டன்ஸ்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, ஒத்தக்கால்மண்டபம் அரசு மேல்நிலைப்பள்ளி. ஒரு நிமிடத்தில், 30 பேரின் வருகைப்பதிவை உறுதிசெய்யும் இத்திட்டம், மாவட்டத்தில் முதன்முறையாக, இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் முயற்சியால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை அனைத்து பணிகளையும் டிஜிட்டல்மயமாக்க, அனைத்து மாவட்ட அரசு, அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கும், தலா இரு பயோமெட்ரிக் கருவிகள், விநியோகிக்கப்பட்டுள்ளன.இதை பொருத்தி, விரல் ரேகை பதிவு மூலம், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்களின் வருகைப்பதிவு உறுதி செய்யப்படுகிறது. பள்ளி நேரத்தில் சில ஆசிரியர்கள், சொந்த பணிகள் மேற்கொள்ள, வெளியிடங்களுக்கு செல்வதாக எழும் புகார்களுக்கு, இதன் வாயிலாக முற்றுப்புள்ளி வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில் முதல் முறை கல்வித்துறை இத்திட்டத்தை முன்னெடுக்கும் முன்பே, கோவை, அசோகபுரம் மாதிரி பள்ளி மற்றும் ஒத்தக்கால்மண்டபம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில், ஆசிரியர்களுக்கான பயோமெட்ரிக் வருகைப்பதிவுக்கான, ஸ்மார்ட் அட்டெண்டன்ஸ் கருவி, இம்மாத துவக்கத்தில் பொருத்தப்பட்டது.
கோவை மாவட்டத்தில், இம்முன்னோடி திட்டம் இப்பள்ளியில் தான் முதன்முறையாக துவங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.ஒரு நிமிடத்தில் ‘ஓகே’சுமார் இரு வினாடிகளுக்கு ஒருவர் வீதம், ஒரு நிமிடத்தில், 30 மாணவர்களின் முகம் மற்றும் விரல்ரேகை ஆகிய பதிவுகளை ‘டிக்’ செய்து, வருகையை உறுதி செய்கிறது.காலை 9:00 மணிக்குள் ஒருமுறை, மதியம் 1:20க்குள் ஒருமுறை, என இரு முறை வருகைப்பதிவு மேற்கொள்ளப்படுகிறது.
அதிகபட்சம் 15 நிமிடங்களில், மாணவர்களின் வருகைப்பதிவு பணிகள் முடிந்துவிடும்.அடுத்த சில வினாடிகளில், இக்கருவியுடன் பொருத்தப்பட்ட கம்ப்யூட்டரில், வருகை புரிந்தோர், பள்ளிக்கு வராதோர் பட்டியல் தயாராகி விடுகிறது.பள்ளிக்கு வராத மாணவருக்கு வருகைப்பதிவு மாற்றுவது, மதிய இடைவேளைக்குப் பின், மட்டம் போடுவது உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு, இத்திட்டத்தின் மூலம் முற்றுப்புள்ளி வைக்கலாம்.மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள், எந்நேரத்திலும் பள்ளி வருகைப்பதிவை ஆய்வு செய்யவும் இதில் வசதி உள்ளதாக, பள்ளியின் தலைமை ஆசிரியர் ரமேஷ் தெரிவித்தார்.
முன்னாள் மாணவர்களின் முயற்சிதலைமை ஆசிரியர் ரமேஷ் கூறியதாவது:பள்ளி பொன்விழா ஒட்டி, 1982ல் படித்த முன்னாள் மாணவர்கள் உதவியோடு, கிட்டத்தட்ட, 1.75 லட்சம் ரூபாய் செலவில், இரு கம்ப்யூட்டர் இணைப்புடன், ஐந்து பயோமெட்ரிக் கருவிகள், பொருத்தியுள்ளோம்.இதோடு, அனைத்து பள்ளிகளிலும் ஸ்பீக்கர் பொருத்தப்பட்டுள்ளது. எந்த அறிவிப்பையும், தலைமையாசிரியர் அறையில் இருந்து தெரிவிக்கலாம். முன்னாள் மாணவர்கள், பெற்றோர் முயற்சியால் மட்டுமே இத்திட்டம் சாத்தியமானது. அரசுப்பள்ளிகளில் மாணவர் வருகைப்பதிவை துல்லியமாக அறிய, இத்திட்டம் பெரிதும் கைக்கொடுக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.

error: Content is protected !!